கடலூர் மாவட்டம் ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி இளையராஜா (34) என்பவரை அவரது சித்தி மகன் வெங்கடேசன் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவுக்கும், அவரது சித்தி மகனான வெங்கடேசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த இளையராஜா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது நண்பர் செல்வத்தின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இளையராஜாவை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், “அண்ணிக்கு உன்னைவிட என்னைத்தான் பிடிக்கும்” எனக் கூறிய வெங்கடேசன், இளையராஜாவைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் போதையில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட உடலைக் கிணற்றில் வீசியுள்ளார். போலீஸாரின் தீவிர விசாரணையில் கொலை உறுதியானதையடுத்து, வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
