சென்னை மாவட்டம் ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் பூஜா என்ற பெண் அறிமுகமாகி அவர் உங்களை பார்க்க ஆசையாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற முரளி அடிக்கடி அந்த பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று முரளி அந்த இளம் பெண்ணுடன் ஹோட்டல் அருகில் மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் முரளியை அடித்து என் மனைவியுடன் இருக்கிறாய் யார் நீ? என கேட்டு தகராறு செய்து அவரிடமிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் 9 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அது மட்டும் இல்லாமல் 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இது குறித்து வெளியே சொல்ல மாட்டோம் என மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பூஜா என கூறப்பட்ட அந்த இளம்பெண் தனது நண்பர்களான கார்த்திக், பூபாலன், சுந்தரமூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது. பூஜா பேஸ்புக்கில் பேசும் நபர்களுடன் நெருக்கமாக பழகி பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது.
