மும்பையின் கார் பகுதியில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞரை மும்பை காவல்துறை பத்திரமாக மீட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது நின்றுகொண்டு கரைக்கு வர மறுத்த அந்த நபரைப் பற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் விகாஸ் பாபர் தலைமையிலான குழுவினர் அந்த நபரை சமாதானப்படுத்தி கரைக்கு அழைக்க முயற்சி செய்தனர். ஆனால், அதிகாரிகள் அவரை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர் கடலுக்குள் குதித்தார். இதைக் கண்ட காவல்துறை காவலர்கள் சிறிதும் தயங்காமல் உடனடியாக கடலுக்குள் குதித்து அவரைப் பிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் முழுவதும் அங்கு நின்றிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்கொலை முயற்சிக்கு உண்டான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்றும், மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அந்த இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
