தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவான நிலையில் ஒட்டுமொத்த தமிழகமும் கனமழையில் தத்தளித்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல மழைப்பொழிவு குறைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியது.
இந்நிலையில் புத்தாண்டு அன்றே தென் மாவட்டங்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. தற்போது தென்மேற்கு வங்க கடலில் ஜனவரி 5 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய புயல் சின்னம் உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, கோவை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவு 7:00 மணி வரை நாகை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது
