பலமான அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதையை ஒழிப்பதற்காக பாதயாத்திரையை வைகோ தொடங்கியுள்ளார். அதனை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். போதையை உற்பத்தி செய்வது, விற்பது மற்றும் ஆதரிப்பது என எல்லாமே அவர்கள் தான் செய்கின்றனர். எனவே அறிவாலயத்தை நோக்கிதான் அவர்கள் பாதயாத்திரை செல்ல வேண்டும். திமுக கூட்டணியில் குழப்பம் ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸிலும் முக்கட்சி விவகாரம் தலை தூக்கி உள்ளது. தமிழக காங்கிரஸ்காரர்கள் அறிவாலயத்தின் அடிமைகளாக மாறிவிட்டனர்.
அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே அசுர சக்திகள். நாங்கள் அனுபவத்தில் பலமாக இருக்கின்றோம். விஜய் பலமாக இருப்பதாக அனுமானத்தில் கூறிக் கொண்டிருக்கின்றனர். அனுபவத்தில் பலமாக இருப்பவர்களுடன் அனுமானத்தில் பலமாக இருப்பவர்கள் வந்தால் நல்லது. வரவில்லை என்றால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கூட்டணிக்கு வரவில்லை என்றால் அவருக்கு தான் பிரச்சனை என்று தமிழிசை சௌந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபகாலமாகவே NDA கூட்டணியில் இணைய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
