ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 45 வயது கூலித் தொழிலாளி பில்லத்தியான், தனது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த செவிலியர் ஒருவரிடம் ஊசி போட்டுக்கொண்ட சில நிமிடங்களிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தவறான சிகிச்சையால்தான் பில்லத்தியான் உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். தற்போது போலீசார் இச்சம்பவத்தைச் சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
