உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு ஆலை ஒன்றில் பணிபுரிந்து வந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் ஆலை ஒன்றில் வெல்லப் பாகு காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து கொதித்துக் கொண்டிருந்த பெரிய கொப்பரைக்குள் டேனிஷ் விழுந்துள்ளார்.
இதில் அவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டுக் கொப்பரையில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து காட்சிகள் அனைத்தும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
