புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் பணி நேரம் இரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர் துறை இரவு 7 மணி வரை என்று அறிவித்திருந்தது. அப்போது இரவு 7 மணிக்கு மேல் வீடு செல்லும் பெண்களுக்கு தொழிற்சாலைகள் வாகன வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த புதுச்சேரி அரசு தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 6-ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி எந்த தொழிற்சாலை அல்லது தொழில்துறையிலும் பெண்களை இரவு 10 மணி வரை பணியமர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு பெண்கள் இரவு ஷிப்டில் 7 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடியும். இந்த மாற்றத்தால் இரவு நேர பணிகளில் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். பெண்களின் பாதுகாப்பு, நலன், சம வாய்ப்புகள், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார பங்களிப்பு ஆகியவற்றை உறுதி செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்களை மேம்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க அரசு உறுதியாக உள்ளது.
