தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியிருந்தும் விடுபட்ட லட்சக்கணக்கான பெண்கள், தங்களையும் இதில் சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தொடர்ந்து மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால், இந்த மனுக்கள் தற்போதைய சூழலில் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும், அவை அனைத்தும் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுத் தரப்பில் இருந்து புதிய பயனாளர்களைச் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ மற்றும் முறையான அறிவிப்பு வெளியானால் மட்டுமே, இந்த மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய பெயர்கள் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. அதுவரை, இந்தத் திட்டத்தில் இணைய விண்ணப்பித்துவிட்டு ஆவலோடு காத்திருக்கும் பெண்களின் மனுக்கள் மீது எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
