தமிழ்நாட்டில் அமோகவரவை பெற்று வரும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்” குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை காணலாம். புதிதாக உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா அல்லது அவர்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன? என்பதை குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.
முதல் கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 1.15 கோடி தகுதியுள்ள பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, புதிய பயனாளிகளை சேர்க்கும் விதமாக, ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடத்தும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு என தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்கள், ஆர்வமுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டு மட்டுமே இருந்தால், திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், புதிதாக திருமணமானவர்கள் கூட, இத்திட்டத்தில் சேர ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசு இதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள், அதிகபட்சம் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட முகாம்மில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள், அரசு தரப்பிலிருந்து அப்டேட்கள் வெளியாகும். இந்த 45 நாட்கள் கழித்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பயனாளர்களின் நிலை என்ன? என்பதை எளிதில் அறியும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தவிர 46 வகையான சேவைகளுக்கும் அரசு அப்டேட் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
