பிரிட்டனைச் சேர்ந்த சோனியா எக்செல்பை (32) என்ற பெண், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது கடத்தல் மற்றும் கொலை வழக்காகக் கருதப்பட்ட நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் உரைய வைத்தன. சோனியா, தன்னை சித்திரவதை செய்து கொல்வதற்காக புளோரிடாவைச் சேர்ந்த டுவைன் ஹால் (53) என்பவருக்கு சுமார் 4,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 3.3 லட்சம் ரூபாய்) பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாகவே கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா, இணையதள மன்றம் ஒன்றின் மூலமாக டுவைன் ஹாலைத் தொடர்புகொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் நகரில் இருந்து அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்ட சோனியா, அங்குள்ள ஓர் வாடகை வீட்டில் தங்கி இந்த கொடூர நிகழ்வுக்குத் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்துள்ளார். சோனியாவைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அமெரிக்க புலனாய்வுத் துறையினர், வங்கிப் பரிவர்த்தனைகள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் இரத்தக் கறை படிந்த தடயங்களை வைத்து டுவைன் ஹாலைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் டுவைன் ஹால் மீது முதல் நிலைக்கொலை மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், சோனியாவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், “அவர் மிகவும் அன்பானவர், மென்மையான குணம் கொண்டவர். அவர் வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தாலும், அவரைப் பற்றிய நினைவுகள் எப்போதும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளனர். இணையப் பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும் மனநலப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஒரு சோகமான நிகழ்வாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.
