கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பெரும் படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்தி குமாரின் தாயார் ஹாலாம்மாவுக்குக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி, ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சமீபத்தில் ஹாலாம்மா சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சக்தி குமார், அவரது மனைவி மற்றும் கோபால் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது சக்தி குமாரின் மனைவிக்கும் கோபாலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகாத உறவிற்குச் சக்தி குமார் இடையூறாக இருந்துள்ளார்.
இந்நிலையில், “அம்மாவும் கோபாலும் சேர்ந்து அப்பாவைத் தாக்கியதை நான் பார்த்தேன்” எனச் சக்தி குமாரின் சிறுமி மகள் உறவினர்களிடம் கூறியதால் உண்மை அம்பலமானது. கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த சக்தி குமாரைக் மனைவியும் கோபாலும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, பின்னர் தற்கொலை போலக் காட்டத் தூக்கில் தொங்கவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
