திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வரும் அம்ப்ரோஸ் என்பவருடைய மகள் பிரியங்கா (27). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு பாளையங்கோட்டையை சேர்ந்த ஜெஃப்ரின் டேவிட்சன் என்பவருடன் கலந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மனைவியை ஜெஃப்ரி சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினரிடம் பிரியங்கா போனில் பேசிய போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவில்லை, எனக்கும் என்னுடைய கணவருக்கும் சண்டை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருடம் பிறந்து சில நிமிடங்களில் பிரியங்கா தன்னுடைய கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரை காப்பாற்ற முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் கணவர் தரப்பிலிருந்து பெண் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பிரியங்கா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருடம் பிறந்த சில நொடிகளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு மகிழ்ச்சியாக வருடத்தை தொடங்கி பிரியங்கா அடுத்த சில நிமிடங்களில் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொலை செய்துவிட்டு நாடகம் போடுகிறார்கள் என்று பிரியங்காவின் சகோதரி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் பெண் சந்தேகமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
