ஜார்கண்ட் மாநிலம் ஜம்தரா மாவட்டம் மிஹிஜாம் பகுதியை சேர்ந்த மகாவீர் என்பவருடைய மனைவி காஜல் தேவி. திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது மகாவீரிடம் செல்போனை தருமாறு காஜல் கேட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் செலவு செய்வதற்கு பணம் வேண்டும் என அவர் கேட்ட நிலையில் செல்போன் மற்றும் பணம் தருவதற்கு மகாவீர் மறுத்துவிட்டார். இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த காஜல் வீட்டிலிருந்த கத்தியால் கணவனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மகாவீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மகாவீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காஜலை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். செல்போன் தராததால் கணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
