உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் (42) – மம்தா (37) தம்பதிக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிய நிலையில், 18 வயதில் மகனும் 12 வயதில் மகளும் உள்ளனர். உமாசங்கர் பணி நிமித்தமாகக் குஜராத் சென்றிருந்தபோது, மம்தாவிற்கு அண்டை வீட்டைச் சேர்ந்த நகுல் பாவேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மம்தா, கணவனைக் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் வாழத் திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்குக் கொண்டுவந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார். பின்னர் மாடிக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த கணவன் உமாசங்கரைச் சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். நள்ளிரவில் சத்தம் கேட்டு எழுந்த பிள்ளைகள், தந்தை கழுத்து இறுக்கப்பட்டுச் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கொலைக்குப் பின் தப்பியோடி 300 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் ஒளிந்திருந்த மம்தாவை, காவல் துறையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
