தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டதை சேர்ந்த சுவாதிக்கு(28) கணவர், இரு மகன்கள் உள்ளனர். சுவாதியின் ஒரு மகன் விடுதியில் தங்கி படித்தார். இளைய மகன் அவருடன் இருந்து அருகில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த சுவாதி, துண்டிகல் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கிஷனுக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இந்த நிலையில் சுவாதியும் கிஷனும் நெருக்கமாக பழகியுள்ளனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
கிஷன் அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளின் வாடகையையும் வாங்கி சுவாதிக்கு உதவினார். இது கிஷன் குடும்பத்தில் சிக்கலை உண்டாக்கியது. எனவே கிஷனின் சகோதரி மகன் ராஜேஷ் சுவாதியை கொல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் சுவாதியும், இளைய மகனும் வீட்டில் இருந்தபோது தனது நண்பர் வம்சியுடன் உள்ளே நுழைந்தார். பின்னர் மகன் முன்னிலையில் சுவாதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு ராஜேஷ் போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பிய வம்சியைத் தேடுகின்றனர். இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
