திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே உள்ள கம்பரசம் பேட்டையில், பிறந்த சில நாட்களே ஆன நாய்க்குட்டிகளைப் பெண் ஒருவர் சுவரில் வீசிக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் புவனேஸ்வரி என்பவர் நாய்களுக்கு உணவளித்து வருவதை, எதிர் வீட்டில் வசிக்கும் மீனாட்சி மிஸ்ரா என்பவர் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் உலாவரும் மாடுகள் மற்றும் நாய்களை அடிக்கடி கம்பால் அடித்து விரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மீனாட்சி மிஸ்ரா, அன்றைய தினம் அங்கே குரைத்துக் கொண்டிருந்த பச்சிளம் நாய்க்குட்டிகளைப் பிடித்துச் சுவரில் வீசிக் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. காட்சிகள் பதிவான ஆதாரங்களுடன் புவனேஸ்வரி அளித்த புகாரின் அடிப்படையில், ஜீயபுரம் காவல்துறையினர் மீனாட்சி மிஸ்ராவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாயில்லா ஜீவன்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த ஈவு இரக்கமற்ற கொடூரச் செயல், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விலங்குகள் மீதான வன்முறையைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
