சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பயணி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைக்காத ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பயணி உறுதி செய்யப்பட்ட (Confirmed) டிக்கெட்டுடன் தனது இருக்கையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, தான் காலை உணவு சாப்பிடும் வரை மட்டும் அமருவதற்குச் சிறிது இடம் தருமாறு கேட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பயணியும் தனது இருக்கையில் அவருக்கு இடமளித்துவிட்டு, சிறிது நேரத்தில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அவர் கண்விழித்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். யாரென்றே தெரியாத அந்தப் பெண்மணி, உணவைச் சாப்பிட்டு முடித்ததோடு நில்லாமல், அந்தப் பயணியின் அருகிலேயே நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.
டிக்கெட் தனக்கு உறுதியாகி இருந்தும், அந்தப் பெண்ணை எழுப்பக் கூட அந்தப் பயணி பயந்துபோய் உட்கார்ந்திருந்தார். “ஒருவேளை அவரை எழுப்ப முயற்சிக்கும்போது, தவறுதலாக என் கை அவர் மீது எங்கேனும் பட்டுவிட்டால், அது தேவையற்ற பிரச்சனையில் முடிந்துவிடுமோ” என்பதே அந்தப் பயணியின் பயத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
