“தமிழ்நாட்டிற்கு அநீதியா?… அம்பலமான திமுகவின் ‘பொய்’ நாடகம்… மன்னிப்பு கேட்பாரா முதல்வர் ஸ்டாலின்?”… கொந்தளிக்கும் அன்புமணி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!!!

By Muthu Mani on சித்திரை 19, 2026

Spread the love

தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயர்த்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பாமக வரவேற்கிறது. இந்த மறுசீரமைப்பின் மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்பி வந்த தகவல்கள் பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அளித்துள்ள இந்த உறுதிமொழி, தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்ற திமுகவின் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை 816-ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் தொகுதிகள் 50% அதிகரிக்கப்பட்டு 59 இடங்களாக மாறும் என்றும், இதில் 20 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் விளக்கியுள்ளார். தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் 23.76%-லிருந்து 23.87%-ஆகச் சற்று உயருமே தவிர, எக்காரணம் கொண்டும் குறையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகவும், பெண்களுக்கான அதிகாரத்தை எதிர்க்கும் நோக்கிலும் இந்த விவகாரத்தில் பொய்யான அச்சத்தை மக்களிடையே விதைத்ததாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு சட்ட நகலை எரித்தது தேசத்துரோகமானது என்றும், இதற்காக தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நாடகம் ஆடிய ஸ்டாலினின் முகம் தற்போது திரையிடப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

   

திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், மின்கட்டண உயர்வு போன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்கள் கொந்தளிப்பை திசைதிருப்பவே முதல்வர் இத்தகைய பொய் பரப்புரைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் முதல்வர் மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை திமுக இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தால், தமிழகத் தாய்மார்கள் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.