பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் என்ற 42 வயது பெண், தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றுப் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், குர்மீத் சிங் தனது முன்னாள் மனைவியைத் தொடர்புகொண்டு, மீண்டும் இணைந்து வாழலாம் என்றும் அது குறித்துச் சமரசம் பேச நேரில் வருமாறும் அழைத்துள்ளார். கணவனின் பேச்சை நம்பி வந்த சரோஜை, ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தில் உள்ள புதர்கள் நிறைந்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொன்று வயல்வெளியில் புதைத்துள்ளார்.
இக்கொலை நடந்தபோது சரோஜின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த ஆடு மேய்ப்பவர் இதைப் பார்த்ததும், குர்மீத் அவசர அவசரமாக உடலைப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ஆடு மேய்ப்பவர் அளித்த தகவலின் பேரில் போலிஸாரும் கிராம மக்களும் சேர்ந்து உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பாக இருவரும் ஒன்றாக இணைந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த குர்மீத்தைப் போலீசார் கைது செய்து, கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
