மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்ய மனைவி தனது காதலனுடன் சேர்ந்து மின்சாரம் பாய்ச்சிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பங்டி கிராமத்தைச் சேர்ந்த கஜானன் மோர் (38) என்பவரின் மனைவி கவுடி மோர், விஷ்ணு ஆத்ராம் என்பவருடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார். இவர்களது காதலுக்கு கஜானன் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
மே 3-ம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், கஜானன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கவுடி மோர் மின்சார வயரில் அலுமினியக் கம்பியை இணைத்து கஜானனின் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு கஜானன் வலியால் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக கஜானன் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் விஷ்ணுவின் தூண்டுதலின் பேரில் மனைவி கவுடி மோர் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த வடகான் ஜங்கிள் போலீஸார், கவுடி மோர் மற்றும் அவரது காதலன் விஷ்ணு ஆத்ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
