பகீர்… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்… தூக்க மாத்திரை கொடுத்து கூலிப்படை மூலம் கொடூரமாக கொலை செய்த மனைவி… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஆடி 5, 2026

Spread the love

ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கூலிப்படை மூலம் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த அப்பலநாயுடு, தன் மனைவி ஹேமாவிற்கு பண்டாரு கங்காதர் என்பவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதை அறிந்து கண்டித்துள்ளார். மேலும், மனைவியின் நடத்தையை கண்காணிப்பதற்காக வேலையை விட்டுவிட்டு ஊருக்கே திரும்பியுள்ளார். கணவர் எப்போதும் வீட்டிலேயே இருந்ததால், காதலனை சந்திக்க முடியாத ஆத்திரத்தில் ஹேமா தன் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டினார்.

திட்டத்தின்படி, ஹேமா தன் கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அப்பலநாயுடு மயங்கியதைத் தொடர்ந்து, கங்காதர் ஏற்பாடு செய்த கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டிற்குள் புகுந்து அப்பலநாயுடுவின் கழுத்தை நெரித்தும், இரும்பு கம்பியால் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்தனர். கொலை நடந்த பிறகு ரத்தக்கறைகளைத் துடைத்து, கணவருக்குப் புதிய ஆடைகளை மாற்றி ஹேமா சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளார். மறுநாள் காலை, எதுவும் தெரியாதது போல் அக்கம் பக்கத்தினருடன் சிரித்துப் பேசி நாடகமாடியுள்ளார். வீட்டிற்கு வந்த அப்பலநாயுடுவின் அண்ணன் மகன், அவர் இறந்து கிடப்பதைக் கண்டு அலறியபோது, ஹேமாவும் சேர்ந்து அழுது நாடகமாடி எல்லோரையும் நம்ப வைக்க முயன்றார்.

   

எனினும், அப்பலநாயுடுவின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த ஊர் மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடற்கூறு ஆய்வில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, போலீஸார் ஹேமாவைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது, கள்ளக்காதலன் கங்காதருடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கணவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹேமாவும், கங்காதரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலையில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.