மும்பையை அடுத்த நவிமும்பை ஐரோலி பகுதியைச் சேர்ந்த 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா என்பவரின் மனைவி சுனிதாவுக்கு, ராகுல் தஷ்ரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த விவகாரத்தை அறிந்த பலிராம் தனது மனைவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பலிராமை ஒழித்துக் கட்டத் திட்டமிட்ட சுனிதா, கடந்த 2025 ஆகஸ்ட் 9 அன்று தன் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அன்றிரவு கணவர் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது, கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து பலிராமின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலை மூன்று துண்டுகளாக வெட்டிச் சாக்கு மூட்டைகளில் கட்டி, ஆட்டோ மூலம் கொண்டு சென்று மலைக் காட்டுப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டுத் தப்பினர். எவருக்கும் சந்தேகம் வராதவாறு சுனிதா தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு வேறு பகுதிக்குக் குடிபெயர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பலிராமின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது. இதையடுத்து தப்பியோட முயன்ற கள்ளக்காதல் ஜோடியை 11 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
