இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IVRI) ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த எட்டாவாவைச் சேர்ந்த ஜிதேந்திர யாதவ் (33), கடந்த ஜனவரி 26 அன்று பரேலியின் இஸ்ஸாத்நகர் பகுதியில் உள்ள தனது வாடகை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதங்களிலேயே அவர் உயிரிழந்ததால், ஆரம்பத்தில் இது தற்கொலை என நம்பப்பட்டது. ஆனால் ஜிதேந்திராவின் குடும்பத்தினர் அவரது மனைவி ஜோதி பிரஜாபதி மற்றும் உறவினர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளித்ததன்பேரில் போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கையில் ஜிதேந்திரா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. விசாரணையில், ஜிதேந்திரா ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்ததால் குடும்பத்தில் கடுமையான தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனை மறைக்க ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஜிதேந்திராவைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல நாடகமாடியதாகப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் மூதாதையர் சொத்து தொடர்பான தகராறு மற்றும் கார், வீடு கேட்டு ஜோதியின் குடும்பத்தினர் கொடுத்த அழுத்தம் ஆகியவையும் முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இது தொடர்பாக ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பரேலி போலீஸார், தற்கொலை எனச் சித்தரிக்கப்பட்ட இந்தச் சதித்திட்டத்தின் முழுப் பின்னணியையும் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
