மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு ஹரி ராம் சிங்கின் மனைவி சுனிதா தேவியைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று சுனிதா தேவி தனது கணவரிடம் புதிதாகச் சேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் வலுவான காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சுனிதா தேவியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுனிதா தேவியை வரும் 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொலையின் உண்மையான பின்னணியைக் கண்டறிய போலீசார் அவரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
