விஸ்வநாதன் ராமமூர்த்தி ஏன் பிரிஞ்சாங்க தெரியுமா?… எல்லாத்துக்கும் அந்த பழக்கம்தான் காரணமாம்!

By vinoth on மார்கழி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

ஆனால் ஆரம்ப காலத்தில் இவர் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரான ராமமூர்த்தியோடுதான் இணைந்து பணியாற்றினார். இருவரும் பணம் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள். இந்த வெற்றிக்கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து பணியாற்றியது. விஸ்வநாதனை விட ராமமூர்த்தி மூத்தவர் என்றாலும் அந்த கூட்டணி ‘விஸ்வநாதன் – ராமமூர்த்தி’ என்றே அழைக்கப்பட்டது. இருவரும் ஈகோ இல்லாமல் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்கள்.

   

இதில் விஸ்வநாதன் மெட்டமைப்பது பாடலைக் கேட்டு வாங்குவது போன்ற பணிகளைப் பார்த்துக்கொண்டால், ராமமூர்த்தி வாத்திய கோர்வை மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா ஆகிய பணிகளைப் பார்த்துக் கொள்வார். இப்படி வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது. இருவரும் பிரிந்த பின்னர் விஸ்வநாதன் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்தார். ராமமூர்த்திக்கு அந்தளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

   

 

இவர்கள் இருவரும் பிரிந்ததற்குக் காரணம் ராமமூர்த்தியின் குடிப்பழக்கம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. அவர் குடித்துவிட்டு அப்படியே ரெக்கார்டிங்குக்கு வருவது, இசைக் கலைஞர்களிடம் ரகளை செய்வது என இருந்துள்ளாராம். ஆனால் இது விஸ்வநாதனுக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் ஒரு கட்டத்தில் இருவர் கூட்டணியை எம் எஸ் வி பிரிந்துள்ளார்.

இப்படி இவர்கள் பிரிந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் அளவற்ற மதிப்பும் பாசமும் கொண்டிருந்தனர். பிரிந்ததற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் ஒரே ஒரு படத்தில் மட்டும் இணைந்து பணியாற்றினார்கள். அது சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படம்தான்.