கோவை மாவட்டம் பேரூர் ஆற்று வீதி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், கடந்த 29-ம் தேதி இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளார். அந்த நபர் படுக்கையறை கதவைத் திறக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கௌசல்யா சத்தமிடவே, அவரது கணவர் அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் லாவகமாக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அதே நபர் அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் திருட முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக கௌசல்யா அளித்த புகாரின் பேரில் பேரூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மர்ம நபரைத் தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
