தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி, தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இப்பணி தள்ளிப்போனது. இதனால் புதிய கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் காத்திருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவி வந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி முறைப்படி தொடங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை மானிய விலையில் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மேலும், மக்களுக்கான சேவைகளைச் செய்யும்போது, அதைப் பொறுக்க முடியாதவர்கள் வழக்கறிஞர் நியமனத்தில் பணம் வாங்கியதாக வீண் அவதூறு கூறுகின்றனர் என்றும் அமைச்சர் இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
