உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும் நிகாப் அணிந்த மாணவிகள் போஜ்புரி, ஹரியான்வி மற்றும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பள்ளியின் மேலாளர் ராம் சுரேஷ் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இந்த கலைநிகழ்ச்சி வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே நடத்தப்பட்டதாகவும், எந்தவொரு மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், மேடையில் நடனமாடிய மாணவிகள் அனைவரும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என மாவட்ட அடிப்படை கல்வி அலுவலர் அமித் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தவறிழைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது தகுந்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
