தமிழக சட்டசபைத் தேர்தலில் தாம் போட்டியிடாதது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முக்கிய விளக்கமளித்துள்ளார். தாம் எந்தத் தொகுதியையும் கேட்கவில்லை என்றும், போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை ஏற்கனவே கட்சி மேலிடத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோயம்புத்தூர் உள்ளிட்ட எந்தத் தொகுதியிலும் தம்மால் போட்டியிட முடியும் என்றாலும், தற்போதைய சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள 27 பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்வதே தமது முக்கிய பணி என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது மற்ற வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்ததாகவும், அதனை இந்தத் தேர்தலில் ஈடுகட்ட விரும்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “காலம் இருக்கிறது, காட்சிகள் மாறும்” என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் பல தேர்தல்கள் வரவுள்ள நிலையில், தற்போது திமுகவின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தமது இலக்கு என்று கூறியுள்ளார். இதன் மூலம் கட்சித் தலைமையின் முடிவுக்கு மதிப்பளித்து, மாநிலம் தழுவிய தேர்தல் பணிகளில் அவர் முழுவீச்சில் ஈடுபடவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
