அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பகிர்ந்துள்ள பெரும் வெடிப்பு தொடர்பான வீடியோ, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, ஈரானின் முக்கிய நகரமான இஸ்ஃபஹானில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலைக் குறிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தப் பகுதியில் உள்ள ராணுவ விமானப்படைத் தளம் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை இலக்கு வைத்து, 907 கிலோ எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ (Bunker Buster) ரக குண்டுகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் இஸ்ஃபஹானில் உள்ள நிலத்தடி வசதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ மூலம் இந்த நகரம் இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 540 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் இங்கு நகர்த்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட மறுத்த சூழலில், அமெரிக்க படைகள் இந்த அதிரடி ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு உள்ளிட்ட பொதுக் கட்டமைப்புகளை முற்றிலும் அழிப்பேன் என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் அல்லது முறையான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீடியோவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளதால், மேற்காசியாவில் போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
