ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் ‘வர்மாலா’ சடங்கின் போது மேடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணமக்கள் மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்தபோது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை வெடிக்கச் செய்யப்பட்டதில் ஏற்பட்ட ஒரு சிறு பொறி, மேடையிலிருந்த அலங்காரப் பொருட்களில் பட்டு தீ மளமளவெனப் பரவியது.
தீ விபத்து ஏற்பட்ட அந்த நொடியில், மணமகன் துரிதமாகச் செயல்பட்டு மணமகளை மேடையிலிருந்து கீழே தள்ளிக் காப்பாற்றினார். சில வினாடிகளுக்குள் மேடை முழுவதும் தீப்பிழம்புகளாக மாறியது. மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய தருணம், கண்ணிமைக்கும் நேரத்தில் மரண பயத்தைத் தரும் பயங்கரமான காட்சியாக மாறியது. அதிர்ஷ்டவசமாக மணமக்கள் இருவரும் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினர்.
View this post on Instagram
இந்த விபத்தால் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடையே பெரும் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண விழாக்களில் இதுபோன்ற ஆபத்தான வாணவேடிக்கை அலங்காரங்களைத் தவிர்த்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
