இந்தியாவில் வங்கி பரிவர்த்தனை முதல் அரசு சேவைகள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ள நிலையில், அதை பயன்படுத்தி நடக்கும் பண மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மோசடியாளர்கள் வங்கி அதிகாரிகள் போல நடித்து போலி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் உங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் OTP எண்களைத் திருடி, ‘ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம்’ வாயிலாக உங்கள் கணக்கை காலி செய்கின்றனர்.
உங்கள் பயோமெட்ரிக் தரவுகள் (கைரேகை, கருவிழி) தவறான கைகளில் கிடைத்தால், நிதி இழப்பு மட்டுமின்றி உங்கள் பெயரில் போலி சிம் கார்டு அல்லது கடன்கள் பெறப்படும் அபாயமும் உள்ளது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, அடையாளத் தேவைக்கு முழு ஆதார் எண்ணிற்குப் பதில் ‘மாஸ்க்டு ஆதார்’ பயன்படுத்துவது சிறந்தது.
அந்நியர்களிடம் தொலைபேசியில் எக்காரணம் கொண்டும் OTP பகிரக்கூடாது; அதேபோல் பொது கணினிகளில் ஆதார் பதிவிறக்கம் செய்தால் அதை உடனே நீக்கிவிட வேண்டும். மிக முக்கியமாக, அதிகாரப்பூர்வ mAadhaar செயலி மூலம் உங்கள் கைரேகை தகவலை (Biometric Lock) லாக் செய்து வைப்பதன் மூலம் திருடர்கள் உங்கள் அனுமதியின்றி பணம் எடுப்பதைத் தடுக்கலாம்.
