எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். இதில் குறிப்பாக, மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் போலவே, இம்முறையும் விளிம்புநிலை மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் இந்த அறிவிப்புகளுக்குப் போட்டியாக, திமுக அரசு கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான பூர்வாங்க பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது தகுதியுள்ள மற்ற கடன் விவரங்களைச் சேகரிக்க கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விரைவில் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து நகைக் கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வமான ‘நல்ல செய்தி’ வெளியாகும் எனப் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
