நடிகர் விஷால் ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த நடிகை அபிநயா என்பவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகனான விஷால் இயக்குனராகும் கனவோடு திரை உலகில் நுழைந்தவர். ‘வேதம்’ படத்தில் நடிகரும் இயக்குனருமான அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2004 இல் வெளியான ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இவருடைய முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி’ திரைப்படம் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்தது. இவர் நடிப்பில் வெளியான திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற ஆக்சன் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து நடிகர் விஷால் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தார். ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் காதலிக்கும் பிளேபாயாக கலக்கியிருந்தார். இவர் நடிப்பையும் தாண்டி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் நடிகர் சங்கத்தின் செயலாளர் என்பதும் நாம் அறிந்ததே. இப்படி தமிழ் சினிமாவில் தனது திறமையினை பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தி வரும் நடிகர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுஷா என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திடீரென இத்திருமணம் நின்றுவிட்டது.

ஏன் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்பொழுது நடிகர் விஷால் பிரபல நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் நாடோடிகள், ஆயிரத்தில் ஒருவன், குற்றம் 23 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இன்றி நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘பூஜை’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அபிநயாவும் விஷாலும் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
