நடிகர் விஷால் நடித்த பல படங்களில் சில படங்கள் மட்டுமே அவரது பெயர் சொன்ன படங்களாக அமைந்தன. அதில் மிக முக்கியமானது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன். அந்த படத்தில் டிடெக்டிவ் கணியன்பூங்குன்றன் கேரக்டரில் விஷால் வாழ்ந்திருப்பார்.
அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் துப்பறிவாளன் 2 படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்தது. லண்டனில் இந்த படப்பிடிப்பு நடந்த போது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டதால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. ஆனால் அது விஷால் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இதற்கிடையே துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி, ஹீரோவாக நடிக்கிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்பே விஷால் பகிரங்கமாக அறிவித்தார். அவர் தொடர்ந்து அவர் நடித்த படங்கள், தியேட்டர் ஆபரேட்டரே கண்ணை பொத்திக்கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக இருந்ததால், அவரது படம் இயக்கும் திட்டம் தள்ளிப் போனது.
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி, விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் உண்மையில் இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய காரணம், அந்த படத்தில் இன்னொரு நாயகனாக நடித்திருந்த எஸ்ஜே சூர்யா என்னும் நடிப்பு அரக்கன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ள நடிகர் விஷால், இப்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்க்கச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்பு, அங்கு துப்புறிவாளன் 2 படத்தை இயக்கவும், அவரே நடிக்கவும் முடிவு செய்துள்ளார். படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
ஆனால் இந்த படம் வெளிவந்த பிறகுதான் மிஷ்கின் சிறந்த இயக்குநரா, அல்லது விஷால் சிறந்த இயக்குநரா என்பது தெரிய வரும். அதேவேளையில் பெரும்பாலான வெற்றிப் படங்கள் 2ம் பாகமாக வெளிவரும்போது தோல்வி படங்களாக இருக்கின்றன. முதலில் விஷால் அதில் ஜெயிக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் முதல் படத்தை ஹிட்டாக்கி கொடுத்த மிஷ்கின் இல்லாமல் 2ம் பாகம் எடுப்பதும் விஷாலின் நன்றி மறந்த ஒரு செயலாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.