ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், ஆடு திருட வந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் பிந்தானியின் மகன் சம்பித் பிந்தானி, தனது தாய் மாமா வீட்டில் தங்கி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை இந்தகோலி கிராமத்தில் ஆடு திருட வந்ததாகக் கூறி, சம்பித் பிந்தானி உட்பட இரண்டு சிறுவர்களைக் கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து மர்மமான முறையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்து மாணவனின் தந்தை ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள்ளேயே, காயமடைந்த சிறுவர்களைப் போலீசார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஜரடிஹி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ராய்ரங்பூர் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாணவன் சம்பித் பிந்தானி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது ஒரே மகனைப் பறிகொடுத்த தந்தையின் கதறல் மருத்துவமனை வளாகத்தையே உலுக்கியது.
சம்பவம் தொடர்பாகப் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆடு திருட வந்த 4 சிறுவர்களில் இருவர் தப்பியோடிய நிலையில், பிடிபட்ட சம்பித் மற்றும் மற்றொரு சிறுவனை ஊர் மக்கள் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. ஆத்திரமடைந்த கிராமத்தினர் முதலில் சிறுவர்கள் வந்த இருசக்கர வாகனங்களை எரித்துள்ளனர், பின்னர் தப்பிக்க முயன்ற அவர்களைப் பிடித்துக் கட்டிப்போட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். ஒரு பள்ளி மாணவன் என்று கூடப் பார்க்காமல் கும்பல் வன்முறையில் (Mob Lynching) ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் பிஎன்எஸ் (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்தகோலி கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். காயமடைந்த மற்றொரு சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தகைய கும்பல் வன்முறைகள் சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குவதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
