விளாத்திகுளம் மாணவி கொலை… சிசிடிவி-யில் சிக்கிய அந்த ஒரு ‘நபர்’.. அம்பலமான கொடூர முகம்… !!

By Muthu Mani on பங்குனி 19, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த மார்ச் 10-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்கள் ஒன்பது நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கொலையாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் (என்கிற மாவீரன், 27) என்பது விசாரணையில் உறுதியானது. பார்த்திபனூர் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி அவர் நடமாடியதை சிசிடிவி காட்சிகள் காட்டின. பிடிபட்ட தர்மமுனீஸ்வரனின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததும், மாணவியின் உடல் திசுக்களுடன் அவரது டிஎன்ஏ (DNA) மாதிரிகள் பொருந்திப் போனதும் அவர் தான் கொலையாளி என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

   

விசாரணையில் தர்மமுனீஸ்வரன் குறித்து வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவர் ஏற்கனவே 2020-ம் ஆண்டு கோவில்பட்டி அருகே 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்றவர் என்பது தெரியவந்துள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இவர், மீண்டும் ஒரு இளம் மாணவியைப் பின்தொடர்ந்து சென்று அதே போன்றதொரு கொடூரத்தைச் செய்திருப்பது அவரது வக்கிரப் புத்தியை வெளிப்படுத்துகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

   

குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இத்தகைய தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே வலுத்துள்ளது. ஒரு சிறுமியின் வாழ்வைச் சிதைத்த இந்தக் கொடூரக் கொலை வழக்கு, பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.