நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமந்தா, எமி ஜாக்சன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தின் ரீ-ரிலீஸ் செய்தியால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் தற்போது ஒத்திவைக்கப்படுவதாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிதாக வெளியாக உள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆரோக்கியமான வர்த்தகச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டிப் பல புதிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், அவற்றுக்குப் போதிய இடவசதி அளிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
