நடிகர் விஜய் சினிமா துறையில் தடம் பதித்த ஆரம்ப காலங்களில் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் வீட்டை இடித்துவிட்டு, அங்கு அடுக்குமாடி குடியிருப்பு (Apartment) கட்ட அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முடிவு செய்துள்ளார். இந்த வீட்டில் நீண்ட காலமாக இயங்கி வந்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ஸ்டுடியோ மற்றும் எஸ்.ஏ.சி-யின் அலுவலகம் ஆகியவை தற்போது காலி செய்யப்பட்டுள்ளன. இந்த வீட்டை இடிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்த வீட்டில் நாள்தோறும் சுமார் 200 பேருக்கு மதிய உணவு அன்னதானமாக வழங்கப்பட்டு வருகிறது. வீட்டை இடிக்கும் பணி தொடங்கினால், இந்த அன்னதானம் தடைபடுமோ என்ற கவலை அந்தப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. எனினும், வீட்டின் பழமை மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவை எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலை அவர் ஏற்கனவே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீட்டை இடிப்பதற்கான நேரத்தைத் தேர்ந்தெடுத்ததில் ஒரு சுவாரசியமான அரசியல் காரணமும் பேசப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சரான பிறகு இந்த அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டால், அது தேவையற்ற ஊழல் புகார்களுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், இப்போதே பணிகளைத் தொடங்குவதே சரியாக இருக்கும் என்று அவர்கள் கருதுவதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
