தமிழகத்தையே உலுக்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு, தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து முந்தைய திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, அந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை விரைவில் சிபிஐ வசம் செல்லவிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாறும் பட்சத்தில், ஆரம்பம் முதலே கிசுகிசுக்கப்பட்ட முக்கியப் புள்ளிகள் மீதான விசாரணை வளையம் இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த கொலையின் பின்னணியில் முந்தைய திமுக ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதல் இருந்ததாகக் கூறப்படும் புகார்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அத்தோடு நின்றுவிடாமல், பிரபல தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த முக்கியத் தலைவருக்கும் இந்த படுகொலையில் தொடர்பு இருப்பதாகப் பரவி வரும் தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிபிஐ அதிகாரிகள் களமிறங்கினால் தங்களின் பெயர்கள் அம்பலமாகி, சிறை செல்ல நேரிடுமோ என்ற பீதியில் இவ்விருவரும் தங்களது சட்ட ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இந்த வழக்கில், தவெக அரசின் அதிரடி முடிவு காரணமாக உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு, உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் திரைப்பட இயக்குநருமான பா.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கின் சிபிஐ விசாரணை தொடங்கும் போது, தமிழக அரசியலில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
