புரட்சித் தலைவர் எம்ஜிஆரை வள்ளல் குணம் கொண்டவர், பொன்மனச் செம்மல் என்று அழைப்பதுண்டு. ஏனெனில் உதவி கேட்டு வருபவர்களுக்கு ஒரு நாளும் அவர் இல்லையென்று சொன்னதில்லை. குறிப்பாக சாப்பாடு விஷயத்தில், தன் வீட்டுக்கு வரும் விருந்தாளியிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி, சாப்பிட்டீங்களா என்பதுதான். அவர் இருந்த போது ராமாவரம் தோட்டத்தில் எப்போது சென்றாலும், யாரும் பசியாறலாம்.
நடிகர் விஜயகாந்த், தன் வாழ்வில் எம்ஜிஆரை இந்த விஷயத்தில் அப்படியே பாலோ-அப் செய்தார். தி. நகரில் உள்ள ரோகிணி லாட்ஜில், சினிமா வாய்ப்பு தேடுகிற இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் எப்போது சென்றாலும் உணவு வழங்கப்பட்டுள்ளது. காலையில் டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என பசி என்று யார் வந்தாலும் உணவு கிடைக்கச் செய்தவர்தான் விஜயகாந்த். அதே போல் தன் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர் முதலில் கேட்கிற கேள்வி சாப்பிட்டீங்களா என்பதுதான். அவர் வீட்டுக்கு வருபவர்களை, சாப்பிடாமல் அனுப்ப மாட்டார் விஜயகாந்த்.
அதுமட்டுமின்றி தனது படத்தின் படப்பிடிப்பில் அனைவருக்கும் பாகுபாடின்றி அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்தவர் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. மட்டன், சிக்கன், மீன் என, அந்த படத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே விதமான அசைவ விருந்து தந்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே. உணவு விஷயத்தில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பெரிய நடிகர், சின்ன நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் என்று படப்படிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான, ஒரே மாதிரியான உணவு எம்ஜிஆர் வழங்கியதை போலவே, நடிகர் விஜயகாந்தும் வழங்கினார். அதனால் விஜயகாந்த் படம் என்றாலே, அந்த படத்தில் பணிபுரியும் உணவு பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படும். அதனால்தான், அவரை கருப்பு எம்ஜிஆர் என பலரும் அழைக்கின்றனர் என, இந்த தகவலை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.