தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் சம பலத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். எந்தக் கூட்டணியில் தேமுதிக இணைகிறதோ, அந்தக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிப்படையாகப் பேசிய விஜய பிரபாகரன், தேமுதிக சார்பில் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்துக் கட்சியின் கணக்கீடுகளை முன்வைத்தார். குறிப்பாக, கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 20 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 20 தொகுதிகளைத் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இதனுடன் சீனியர் நிர்வாகிகள் மற்றும் புதுமுகங்களையும் சேர்த்து மொத்தம் 25 முதல் 30 தொகுதிகள் வரை கேட்கத் தேமுதிக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளுமே தலா 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகக் கூறிய அவர், தேமுதிக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் போன்ற பாஜக தலைவர்கள் தேமுதிகவை அணுகுவதாக வரும் செய்திகளை ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் மறுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் தேமுதிக எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
