தமிழக அரசியல் களத்தில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசு அமைவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை வென்ற தவெக ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் நீடித்ததால் தமிழக அரசியலில் பெரும் குழப்பமும் பரபரப்பும் நிலவி வந்தது.
இந்த இக்கட்டான சூழலில், ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் நம்பரை எட்ட இன்னும் இரண்டு இடங்கள் குறைவாக இருந்ததால் இழுபறி நீடித்தது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஆதரவு கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தவெக தரப்பில் ஆட்சி அமைப்பதற்கான போதிய பலம் தற்போது கிடைத்துள்ளது.
விசிக-வின் ஆதரவு கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, மிகுந்த உற்சாகத்துடன் “வெற்றி.. வெற்றி.. வெற்றி.. விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்கிறார்” என அறிவித்தார். தங்களுக்கு ஆதரவளித்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்த அவர், இதன் மூலம் தமிழகத்தில் ஜனநாயகம் காக்கப்படும் என்றும், மக்களின் பேராதரவோடு ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இதன்மூலம் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் முட்டுக்கட்டை நீங்கி, புதிய அரசு அமைவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.
