தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைத்துள்ள விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய் மறைமுகமாக 150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகளை ‘கூட்டாஞ்சோறு’ அரசியலோடு ஒப்பிட்ட சீமான், மற்ற கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களையும், செல்வாக்கற்ற ‘லெட்டர் பேட்’ கட்சிக்காரர்களையும் திரட்டி விஜய் களம் காண்பதாகக் குற்றம் சாட்டினார். “150 பேரிடம் துணியை வாங்கி ஒட்டுப்போட்டுச் சட்டை தைத்தது போலவும், பத்து வீடுகளில் கையேந்திச் சோறு வாங்கி கூட்டாஞ்சோறு ஆக்கியது போலவும் விஜய்யின் வேட்பாளர் தேர்வு அமைந்துள்ளது” எனத் தனது பாணியில் கிண்டல் செய்துள்ளார்.
திமுக 22 கட்சிகளுடனும், அதிமுக 10 கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ள நிலையில், விஜய் வெளிப்படையாகத் தனித்து நிற்பதாகக் கூறினாலும் உண்மையில் 150 சிறிய அமைப்புகளைத் தன்னுள் இணைத்துக் கொண்டுள்ளதே நிதர்சனம் என்பது சீமானின் வாதம். ஒரு தலைவன் என்பவன் தன் மக்களையும், கொள்கையையும் மட்டுமே நம்பி நிற்க வேண்டும் என்றும், பலரைச் சார்ந்து நிற்பது மக்களின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய சீமான், தான் ஒரு தொகுதியில் மட்டுமே நின்று மக்களைச் சந்திப்பதாகவும், தோற்றாலும் அது தன் மக்களிடம் தோற்கும் கௌரவம் என்றும் பெருமிதம் கொண்டார். “எங்களை இனி எவராலும் தோற்கடிக்க முடியாது, அந்த அளவிற்குத் தோல்விகளைக் கடந்து நிமிர்ந்து நிற்கிறோம்” என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கும் அவரது வேட்பாளர் தேர்வுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைத் தனது பேச்சின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
