தமிழக சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தலைவர் விஜய், தொகுதிக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக 60 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 50 பேரிடம் விரிவான நேர்காணலை விஜய் மேற்கொண்டுள்ளார்.
இந்த வேட்பாளர் தேர்வில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்தால் பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே நேர்காணலில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தகுதியுள்ள மற்ற நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தேர்வு செய்த பட்டியலை வைத்தே விஜய் இந்த நேர்காணலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள மற்றொரு முக்கிய அம்சம், வேட்பாளராகப் போட்டியிட நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிபந்தனைகள் ஆகும். ஒரு தொகுதிக்கு சுமார் 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை செலவு செய்யக்கூடிய வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சாதாரணத் தொண்டர்கள் மற்றும் நீண்டகாலமாக உழைத்து வரும் நிர்வாகிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தேர்தல் நெருங்குவதால் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள தவெக தலைமை, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியலை நாளையும், அதைத் தொடர்ந்து தமிழகத்திற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அடுத்த சில நாட்களிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு விஜய்யின் சூறாவளிப் பிரச்சாரப் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
