தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் திட்டம் வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், நீண்ட காலத்திற்குத் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. ஆட்சி அமைந்ததில் இருந்தே பெண்கள் மத்தியில் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டங்களில் இதுவே முதன்மை விவாதப் பொருளாக மாறியுள்ளது.
முன்னாள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. அதற்கு ஆண்டுக்கு ரூ.15,720 கோடி செலவிடப்பட்ட நிலையில், அதே எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு தவெக அரசு வாக்குறுதிப்படி மாதம் ரூ.2,500 வழங்க வேண்டுமானால், ஆண்டுக்கு சுமார் ரூ.39,300 கோடி நிதி தேவைப்படும் என அதிகாரிகள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவதற்காக, ஸ்மார்ட் மீட்டர், மேம்பாலங்கள் மற்றும் புதிய அரசு கட்டடங்கள் போன்ற சில முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, அந்த நிதியை இத்திட்டத்திற்குப் பயன்படுத்துவது சாத்தியமா என்பது குறித்தும் முதல்வர் விஜய் விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.
நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், பயனாளிகளின் தகுதி வரம்புகளை மறுஆய்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பயனடைந்த 1.31 கோடி பெண்களில், தகுதியின் அடிப்படையில் சிலரை முறைப்படுத்தினால் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாகக் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயனாளிகளின் எண்ணிக்கை 80 லட்சமாகக் குறைக்கப்பட்டால், மாதச் செலவு ரூ.2,000 கோடியாகவும், ஆண்டுக்கான மொத்தச் செலவு ரூ.24,000 கோடியாகவும் குறையும் என்றும், இதன் மூலம் திட்டத்தை நிதி ரீதியாகச் சமநிலைப்படுத்த முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு நிதிப் பற்றாக்குறை காரணமாக எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்படக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் மிக உறுதியாக உள்ளார். அதனால்தான் நிதி ஆதாரம், தகுதிப் பட்டியல், செலவின மேலாண்மை உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசியலிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தகுதிகள் மற்றும் தொடங்கும் தேதி ஆகிய விவரங்களுடன் விரைவில் வெளியாகும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
