கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜய்க்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் விஜய்க்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தாலும் சிலர் அவருக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதேசமயம் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனிடையே தனி ஆளாக நின்று கட்சியை வழிநடத்தி வரும் விஜய் கரூர் துயரத்தில் உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில் திடீர் மாற்றமாக அக்டோபர் 17ஆம் தேதி அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில் கரூர் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். விஜய் கரூர் செல்ல மாட்டார் என்று பலரும் விமர்சித்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
