தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் முதன்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துப் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளித்துள்ளார். குறிப்பாக, ‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் விவகாரம் மற்றும் கரூர் விவகாரம் உள்ளிட்ட தொடர் புகார்கள் தன் மீது சுமத்தப்படுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். தன் மீது அடுத்தடுத்துப் பழி போடப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தனது பேச்சின் மூலம் உணர்த்தினார்.
மேலும், ‘ஜன நாயகன்’ திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல்களின் போது தனக்காக ஆதரவுக் குரல் கொடுத்த அனைவருக்கும் விஜய் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக, இந்தப் பிரச்சினையில் எந்தவிதப் பூசி மெழுகலும் இல்லாமல் தனக்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்தத் திடீர் நெகிழ்ச்சியும், முதல்வருக்கு அவர் தெரிவித்த நன்றியும் அரசியல் வட்டாரத்தில் தற்போது உற்றுநோக்கப்படுகிறது.
