விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இத்தகைய செய்திகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் எனத் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் தான் அரசியலில் கால்பதித்தது முதல், தவெகவை ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சியின் “பி-டீம்” என்று முத்திரை குத்தி அவதூறு பரப்பி வருவதாகவும், ஆனால் தனது கட்சி என்றும் எப்போதும் “மக்கள் டீம்” மட்டுமே என்று அவர் உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். தனது அரசியல் பயணத்தில் மதச்சார்பற்ற கொள்கையில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் பிரிவினைவாத அரசியலுக்கு இடம் கொடுக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவப் பாதையிலேயே தவெக பயணிக்கும் என்று தெரிவித்த விஜய், வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். இந்த விளக்கத்தின் மூலம், வரும் தேர்தல்களில் தனித்து களம் காண்பது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைவது குறித்த தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
